வரலாறு

எட்டெழுத்து மந்திரம்

ஐந்து வீட்டு சுவாமி கோயிலின் பக்தர்கள் சுவாமியை வணங்கும்போதும், நெற்றியில் திருமணி இட்டுக்கொள்ளும்போதும், பிரசாதம் வாங்கும்பொழுதும் , அண்ணாவிகளின் காலில் விழுந்து ஆசிர்வாதம் பெறும்போதும் " அடியேன் தாசம்" என்று கூறுவார்கள். வைணவ மதத்தில் உள்ள தென்புலத்தார் "அடியேன் ராமானுஜ தாசன்" என்று கூறுவார்கள். அதன் சுருக்கம்தான் "அடியேன் தாசம்" என்பது. மேலும் இந்த கோயிலில் பூஜை செய்யும் அண்ணாவிகள் "ஹரி ஓம் ராமானுஜாயா" என்ற மந்திரத்தை உச்சரிக்கிறார்கள். அதை எந்திரமாகவும் எழுதுகிறார்கள்.இந்த மந்திரத்தை எட்டெழுத்து மந்திரம் என்று சொல்கிறார்கள். இறைவனை எட்டெழுத்துப்பெருமாள் என்று குறிப்பிடுகிறார்கள். இந்த எட்டெழுத்து மார்க்கத்தில் உள்ளவர்கள் இறந்தால் அவர்களை எரிப்பதில்லை. அதற்கு பதிலாக கால்களை மடக்கி உட்கார்ந்த நிலையில் சமாதி வைக்கப்படுவார்கள். அந்த சமாதிகளின் மேல் கீழ்கண்டவாறு எந்திரம் எழுதி வைக்கப்படும். இறக்கும் தருவாயில் இருக்கும் நபர்களின் காதில் மோட்ச மந்திரம் என்று ஒரு மந்திரம் அண்ணாவிகளால் சொல்லப்படும். மந்திரத்தை காதில் கேட்டவர்கள். வேதனையில்லாத மரணத்தை தழுவுவர். மோட்ச மந்திர உபதேசம் பரம்பரையாக அண்ணாவி குடும்பத்தில் உள்ளவர்களுக்கு மட்டும் உபதேசிக்கப்படும். எல்லா ஜாதிகளிலும் அண்ணாவிகள் உண்டு. இந்த கோவிலில் பூஜை செய்பவர்களுக்கு அண்ணாவிகள் என்று பெயர்.


திருமணி


ஐந்து வீட்டு சுவாமி பக்தர்கள் நெற்றியில் திருமணி என்னும் வெள்ளைப்பொட்டு இட்டுக்கொள்வார்கள். இந்த திருமணி என்பது நாமக்கட்டி போன்று வெள்ளை நிறத்தில் தோற்றமளிக்கும் திருமண்ணாகும். இதை தண்ணீரில் குழைத்து பொட்டு இட்டுக்கொள்வர். புருவ மத்தியில் வெளிச்சத்தை கண்டதற்கு அடையாளமாகத்தான் இந்த வெண் பொட்டு இட்டுக் கொள்ளப்படுகிறது. 
திருமணி என்றால் ஸ்ரீமணி
அதுவே வெள்ளிமணி
அதுவே குண்டலினி
அதுவே லட்சுமி
திருமணி நெற்றியில் 
இட்டவர்க்கு மோட்ச பிராப்தி உண்டாகும்.

பள்ளியறை கட்டில்

பக்தர்கள் இல்லற வாழ்க்கை சிறப்பாக அமைய வேண்டிக் கொண்டு பள்ளியறை கட்டிலுக்கு விரிப்பும், தலையனையும் காணிக்கையாக செலுத்துகிறார்கள்...

காக்கும் கடவுள்