ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் (Eral Sri Arunachala Swami) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஏரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகள் (Eral Sri Arunachala Swami) லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சேர்மன்சாமி வரலாறு


                              ஐந்து வீட்டு சுவாமிகள் அருளினால் அவதரித்த ஏரல் சேர்மன் அருணாசலசாமி சிறு குழந்தையாய் இருந்த போது, மூலக்கரையில் இருந்த பாடசாலையில் கல்வி கற்றார். ஏரல், சிறுத்தொண்டநல்லூர், பழையகாயல் போன்ற கிராமங்களில் பெருமளவில் சொத்துகள் இவர்களது குடும்பத்துக்கு இருந்தன.
அருணாசலம் பண்ணைவிளையில் மேல்படிப்பு படித்தார். அங்கு ஆங்கிலமும் கற்று தேர்ச்சி பெற்றார். அவர் வாலிபபருவத்தை நெருங்க ,நெருங்க அவர் தனது எண்ணத்தை ஆன்மீக தேடலில் கவனம் செலுத்தி வந்தார்.
தனது முன்னோர்கள் செய்து வந்த விசக்கடி மருத்துவத்தையும் தொடர்ந்து செய்து வந்தார். அதனால் அந்த பகுதி மக்களின் நல்ல மதிப்பை பெற்றார்.
அவர் ஆங்கிலத்தில் புலமையையும், அறிவாற்றலையும் கண்ட ஆங்கிலேயர்கள், அவருக்கு சிறுதொண்டநல்லூருக்கு முன்சீப்பாக பதவியளித்தனர். சிறுவயதிலேயே அந்த பொறுப்பில் அவர் சிறப்பாக செயல்பட்டார், வரிவசூல் செய்வது, அந்த கிராமத்தில் ஏற்படும் சிறு பிரச்சனைகளை சண்டைகளை பேசி தீர்த்துவைப்பது என எட்டு ஆண்டுகள் பணியாற்றி வந்தார். 
அந்த சமயத்தில் ஒருநாள் ஊழலுக்கு துனை போக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது, உடனே தவறு செய்ய மறுத்து தனது பதவியை துறந்தார். பின் ஆன்மீகத்தில் முழுமனதாக தீவிரமாக ஈடுபட துவங்கினார், எனவே உறவுகள் அவருக்கு திருமணம் செய்ய உத்தேசித்தனர். ஆனால் அவர் தற்சமயம் வேண்டாம், எனக்கு இருபத்தியெட்டு வயதாகட்டும் பார்க்கலாம் என கூறி மறுத்துவிட்டார். தவறு செய்யாத அப்பழுக்கற்ற பிரம்மச்சாரியாக வாழ்ந்துவரும் அருணாஆத்தை கவனித்த அப்போது மாவட்ட கலெக்டராக இருந்த பிஷ்ப்வெஸ்டன், பிஷ்ப்ஸ்டோன் ஆகிய இருவரின் பரிந்துறையின் பேரில் அவருக்கு ஏரல் பஞ்சாயத்து சேர்மனாக பதவியளித்து கெளரவித்தனர். 
அருணாச்சலம் தனது சேர்மன் பதவி காலத்தில் எண்ணெயில் எரியும் தெருவிளக்குகள் அமைத்து அதை பாதுகாக்க பணியாட்களையும் நியமித்து ஊரினை பாதுகாத்தார். மேலும் ஊராட்சியில் கழிவு நீர் தேங்காமல் பாதுகாக்க வடிகால வசதியும், சுற்று சூழலை பாதுகாக்க மரங்களாஇயும் நட்டு சிறப்பாக செயல்பட்டு மக்களின் மகத்தான ஆதரவை பெற்றார்.
கூடவே தனது ஆன்மீக பலத்தையும் கூட்டிக் கொண்டே இருந்தார். ஒரு நாள் பால்நாடார் என்பவரை பாம்பு கடித்து இறக்கும் தருவாயில் இருக்கும் போது, அவரை கடித்த பாம்பையே வரச்செய்து விசத்தை உறியச்செய்து அவரை காப்பாற்றினார், இதனால் மக்களிடம் அவ்ரின் தெய்வத்தன்மையும் புரியலாயிற்று. அதனால் மக்கள் அவரை சாமி என்றே அழைத்தன, அவர் சேர்மனாகவும் இருந்ததால் அவர் சேர்மன்சாமி என்று பதவியின் பெயராலும் அழைக்கப்பட்டார்.  
. ஒருநாள் காலை சேர்மன் சுவாமி அருணாசலம் எழுந்தவுடன் தனது தம்பி கருத்தபாண்டியை அழைத்து, ‘காலம் கனித்து விட்டது. நான் சிவனடி செல்லும் நாள் வந்துவிட்டது. வருகிற அமாவாசை அன்று ஆடி மாதம் 13ம் நாள் செவ்வாய்க் கிழமை (27. 07. 1908) உச்சிப் பொழுதில் என்னை எம்பெருமான் சிவனோடு அர்ப்பணித்துக் கொள்வேன். நான் உயிர் நீத்தாலும் எப்போதும் உங்களுடன்தான் இருப்பேன். என்னை நம்பி வருபவர்களுக்கு வேண்டிய வரம் அளிப்பேன். அவர்களை காலம் காலமாக காத்துவருவேன். என் ஆவி பிரிந்தவுடன் நமது குல வழக்கப்படி என் உடலை எரித்து விடாதீர்கள். இறந்தோருக்கான சடங்குகளை செய்யுங்கள். அப்போது வானத்தில் கருடன் பருந்து ஒலி கொடுத்து என்னை மும்முறை வலம் வருவார். கருடன் நிழல் என் உடல்மீது படும். அப்போது என்னை உட்கார்ந்த நிலையில் மண்ணையும் மலரையும் கொண்டு மூடிவிடுங்கள்,’ என்று முகமலர்ச்சியோடு சேர்மன் அருணாசலம் சுவாமிகள் கூறினார். 
 அவர் கூறிய நாள் வந்தது. நிறைந்த அமாவாசை தினம். முன்னரே கருத்தபாண்டி நாடார் மூலம் தகவல் அறிந்த உற்றார், உறவினர், நண்பர்கள், நகர மக்கள் என பலரும் அவரது இல்லம் முன்பு கூடினர். பகல் 11 மணிக்கு சேர்மன் அருணாசலம் சுவாமி ‘வருகிறேன்’ என்று கூடியிருந்த அனைவரையும் புன்னகை முகத்துடன் பார்த்துச் சொல்லி கையசைத்தபடி தனது அறைக்குள் சென்றார். கட்டிலில் படுத்தார். கண்களை மூடினார். உச்சிப் பொழுது வந்தது.(பகல் 12 மணி) உறங்கிய நிலையிலேயே சிவனடி அடைந்தார். சுவாமி கூறியபடி தென்மேற்கில் உள்ள தாமிரபரணி நதிக்கரையில் படர்ந்த ஆலமரத்தின் அடியில் சுவாமியின் உடலை அமர்ந்த கோலத்தில் வைத்தனர். உரிய சடங்குகள் நடத்தப்பட்டன. கருடன் சங்கொலியுடன் சுவாமியை வலம் வந்தது. கருடன் நிழல் சுவாமி உடலில் பட்டது. சுவாமிகள் படித்த நூல்கள், பயன்படுத்திய விலை மதிப்பு மிக்க பொருட்கள், உயர்ந்த அணிகலன்கள் ஆகியவற்றை சுவாமியின் காலடியில் வைத்து சுவாமியை மலர்களாலும், மண்ணாலும் மூடினார்கள். 
அருனாசலசாமிகள் தெய்வ நிலையடைந்த ஒருசில நாளில் அவரோடு வைக்கப்பட்ட விலை உயர்ந்த பொருட்களைத் திருடிச் சென்றிட திருடர்கள் குழியைத் தோண்ட முயன்றபோது, பாம்புக் கூட்டம் படையெடுத்து வந்து அவர்களை விரட்டியது. அஞ்சி நடுங்கிய திருடர்கள் ஓடினர். இந்தக்காட்சி ராமசாமி நாடாருக்கு கனவில் தெரிந்தது. அவர் உடனே ஓடி வந்து பார்த்தார். அங்கு மண் தோண்டப்பட்டு இருப்பதையும் அதன் அருகே கடப்பாறை மற்றும் மண்வெட்டி இருப்பதையும் கண்டார். உடனே இனி தெய்வநிலை பெற்ற தெய்வ மகனுக்குக் கட்டிடம் கட்டத் தீர்மானித்து சிறிய கட்டிடம் ஒன்றை கோயிலாகக் கட்டினார். சுவாமிகள் உயிரோடு இருந்த போது அவரிடம் நோய் தீர்க்க மருந்து வாங்கி உண்டவர். 
ஆதிதிராவிடப் பெண்ணான சுடலைப் பேச்சி. அவர் தனக்கு நோய் தீரவில்லையே என்று சுவாமி சமாதிக்கு வந்து வேண்டி அழுதாள். உடனே அந்தப் பெண்ணுக்கு காட்சி கொடுத்த சுவாமி ‘தீர்த்தமும் நிலக்காப்பும் உனக்கு மருந்தாகும்’ என்று கூறினார். அதன்படி அவரது நோய் தீர்ந்தது.  
கிறிஸ்தவர்கள் புதைக்கப்பட வேண்டிய இடத்தில் அருணாசல சுவாமியை புதைத்து விட்டனர். ஆகவே அங்கு எழுப்பப்பட்டிருக்கும் சுவாமியின் கோயிலை அப்புறப்படுத்த வேண்டும் என்று அப்பகுதியை சேர்ந்த சிலர் கலெக்டரிடம் கோரிக்கை வைத்தனர். அப்போது கலெக்டர்களாக இருந்த மெக்வர், டேவிட்சன் இருவரும் இந்தக் கோரிக்கையை பிஷப்பாக இருந்த ஆர்தர் வில்லியத்திடம் தெரிவித்தனர். இதனையடுத்து கலெக்டர்கள், பிஷப்புடன் சேர்ந்து நெல்லையில் இருந்து ஏரலுக்கு குதிரையில் வந்தனர். கோயிலுக்கு முன்பு வர மறுத்து குதிரைகள் முரண்டு பிடித்து நின்றன.
ஆகவே, அவர்கள் குதிரையை விட்டு இறங்கி கோயிலுக்கு வர, கோயிலின் முன்பு சேர்மன் அருணாசலம் சுவாமி கணக்கு எழுதுவது போல அமர்ந்து இருந்தார். அதைப் பார்த்த அவர்கள் பயந்து வெடவெடத்து, காலணிகளை கழற்றி விட்டு, தொப்பிகளை இடுப்பில் இறக்கி வைத்து விட்டு சுவாமியை வணங்கினர். நெல்லை சென்றதும் கலெக்டர், கோயில் அமைந்திருந்த இரண்டு ஏக்கர் நிலத்தினை முறைப்படி பட்டாபோட்டு கொடுத்துவிட்டார். இந்த வரலாறு அரசு ஆவணங்களில் உள்ளது. சேர்மன் அருணாச ல நாடாரின் சமாதி, தாமிரபரணி கரையில் உள்ளது. தற்போது நாள் தோறும் அங்கு பூஜை நடந்து வருகிறது. அங்கு சேர்மனின் போட்டோ ஃபிரேம் செய்து வைக்கப்பட்டுள்ளது. செவ்வாய், வெள்ளி அமாவாசை பௌர்ணமி தினங்களில் இவரை தரிசிக்க சாதி, மதம் பாராமல் வரும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக தாமிரபரணி கரையில் கூடுகிறார்கள். பில்லி, சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அங்குள்ள புற்று மண்ணை மருந்தாக உண்ணுகிறார்கள். உடம்பிலும், கை, கால்களிலும் பூசிக்கொள்கின்றனர், அவர்களுக்கு உடனே குணம் தெரிகிறது என்று ஆங்கிலேய கலெக்டர் பேட்துரை திருநெல்வேலி கெஜட்டர் என்ற நூலில் எழுதியுள்ளார் 
மனிதனாக வாழ்ந்து தெய்வமாக வணங்கப்படும் சேர்மன் சுவாமி சமாதி, இருக்கும் இடத்தில் சுவாமியின் தந்தை தனது கைகளால் சிறிது மண்ணை எடுத்து லிங்கம் போல் பிடித்து வைத்துள்ளார். அந்த லிங்கம் இன்று இரண்டு அடிக்கு மேல் வளர்ந்து உள்ளது. தாமிரபரணி ஆற்று நீரில் லிங்கத்தினை பல ஆண்டுகளாக அபிஷேகம் செய்தும் அந்த லிங்கம் கரையாமல் உள்ளது. அந்த லிங்க அபிஷேக தீர்த்தத்தினால் வலிப்பு நோய், மனநோய், அரிப்பு, கட்டி என பல நோய்கள் தீருகிறது.
சுவாமிகள் ஜீவ சமாதி அடைந்து 100 வருடங்கள் கடந்துவிட்டன. ஆனால், தற்போதும் சுவாமிகள் பலவிதத்தில் தனது ரூபத்தினை மக்களுக்குக் காட்டி வருகிறார். 
திருச்செந்தூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரி முதல்வராக பணியாற்றிய சற்குணம் என்பவர் ஒருசமயம் ஏரலுக்கு சுவாமியைக் கும்பிட குடும்பத்துடன் வந்துள்ளார். அவர்கள் தாமிரபரணியில் நீராடியபோது அவரது மகன் நீரில் முழ்கி விட்டான். உடனே அவர் ‘‘சேர்மா! என் மகனை காப்பாற்று’’ எனக் குரல் எழுப்பியுள்ளார். அப்போது அங்கு வந்த பெரியவர் ஒருவர் ஆற்றில் இறங்கி அவர் மகனை காப்பாற்றினார். சற்குணம் மகனை அரவணைத்துக்கொண்டு காப்பாற்றிய பெரியவருக்கு நன்றி சொல்ல அவரை கூப்பிட்டபோது அவரை காணவில்லை. மகனைக் காப்பாற்றியது சேர்மன் சுவாமிகளே என்று அனைவரும் நம்பினர். 
ஏரல் சுவாமி கோயிலில் மந்திர மை இடுவது வழக்கம். இந்த மந்திர மை ஆல், அரசு, வேம்பு, துளசி, வில்வம், சந்தனம், கற்பூரம் ஆகிய பொருட்களைச் சேர்த்து யாகத்தில் நெய்யிட்டு எரித்து பஸ்பமாக்கி அதனைச் சுவாமியின் முன்னர் வைத்து வழிபாடு செய்து தருகிறார்கள். இந்த மந்திர மையை இட்டுக்கொள்ளும் பக்தர்கள் திருஷ்டி, பேய், பிசாசுகள் விலகுவதாக அனுபவபூர்வமாக சொல்கிறார்கள்.
குலசேகரபட்டினம் அருணாசல பிள்ளை என்பவர் சுவாமி கோயிலுக்குத் தவறாமல் அரிசி தருவார். ஒருமுறை இரவில் தென்திருப்பேரையில் இருந்து அரிசியை ஒரு நார்ப்பெட்டியில் வைத்துக்கொண்டு ஏரலுக்கு வந்தார். அப்போது ஆற்றில் வெள்ளம் வந்த காரணத்தினால் தனியாக எப்படி அக்கரைக்குப் போவது என்று அவர் தவிக்க, ஒரு பெரியவர் தனது பிரம்பை அவர் கையில் கொடுத்து ‘இதைப் பிடித்துக் கொண்டு என் பின்னால் வா,’ என்றார். பிள்ளை அந்த பிரம்பை பிடித்தவுடன் மறுகரை வந்து விட்டதை உணர்ந்தார். சரி நமக்கு உதவி செய்பவருக்கு ஏதாவது செய்யலாம் என்று அவர் அந்தப் பெரியவரைத் தேடியபோது அவரைக் காணவில்லை. தன்னை வழிநடத்தி வந்தது சேர்மன் சுவாமிதான் என்று அவரும் அவர் அனுபவத்தைக் கேட்டவரும் கருதினர். 
இங்கு சித்திரைத் திருவிழா மற்றும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகியவை முக்கிய விழாக்களாகும். மாதம்தோறும் அமாவாசையிலும், பௌர்ணமியிலும் சிறப்பு பூஜைகள் நடக்கின்றன. சுவாமி இங்கு ராஜகோலத்தில், நின்றபடி காட்சி தருகிறார். இங்கு நான்கு கால பூஜை நடக்கிறது. மனநோய், பேய்பிடி, விஷப்பூச்சிக்கடி, வீண்பயம், குடும்பப் பிரச்னை, மன அழுத்தம் என அனைத்தையும் போக்கும் பரிகாரத் தலமாக இந்தக் கோயில் திகழ்கிறது. தென் மாவட்ட மக்களின் வழிபாட்டு தெய்வங்களில் ஏரல் சேர்மன் சுவாமியும் ஒருவர். 
ஓம் சேர்மா நமஹ...!!! ஓம் சேர்மா நமஹ....!!!

சேர்மன் அருணாச்ச சுவாமி Sri Arunachala Swami

-:செட்டியாபத்து கோவிலும், எரல் சேர்மன் அருணாச்சல சுவாமிகளும்:-



திருச்செந்தூர் தாலுகா அம்மன்புரம் மேலப்புதுக்குடியை சேர்ந்த ராமசாமி நாடார் , சிவனைந்த அம்மாள் தம்பதியர் தங்களுக்கு குழந்தை பாக்கியம் இல்லை என வருந்தி ஆத்திசுவாமி கோவிலில் விரதம் இருந்தனர். .   விரதமிருந்த தம்பதியரிடம் திருமணியும், தீர்த்தமும் கொடுத்து விரைவில் உங்களுக்கு ஆண்மகன் பிறப்பான், அவனுக்கு அருணாசலம் என பெயர் சூட்டுமாறும், அந்த குழந்தையின் வாழ்வு பற்றியும் அருளினார் ஐந்து வீட்டு சுவாமி கோயிலில் இருந்த தவத்திரு வேலாண்டிசுவாமிகள், அதன் பயனாய் பிறந்த குழந்தைதான் ஆடி அமாவாசை அன்று எரலில் சிறப்பாக கொண்டாடப்படும்  ஏரல் சேர்மன் அருணாச்சல  சுவாமிகள்,  அதன் நினைவாக,  ஸ்ரீ சேர்மன் அருணாச்சல சுவாமிகளின் தந்தை ராமசாமி நாடார் கட்டிகொடுத்ததுதான், ஆத்திசுவாமி கோவிலில் இப்பொழுது உள்ள பள்ளியறை  கட்டில்  மண்டபம். இங்கு பணிவிடை செய்பவர்களால் வழங்கப்படும் பிரசாதத்தை வாங்கி சாப்பிடும் சந்நியசிகளில் ஒருவர்தான் வேலாண்டி சுவாமிகள் ,அவர் சமாதியான இடம்தான் கோவில் கோட்டை சுவருக்கு வெளியில்  கிழக்கு புறம் உள்ள வேலாண்டி சுவாமிகள் மடம்.