அருள்மிகு பெரியசுவாமி வரலாறு


  தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலையை சார்ந்தவர் ''வடுகநாதர்''. இவருடைய மனைவி ''பொன்னம்மாள்'' இவர்கள் இருவரும் மணமுடிந்து பல ஆண்டுகளாகியும் குழந்தை இல்லாததால், மதுரை மீனாட்சி அம்மனை, குழந்தை வரம்வேண்டி வழிபடச் சென்றனர். அப்போது ஒருவர், வைகை நதியில் தம்பதியர்கள் நீராடி விட்டு மீனாட்சிஅம்மனையும்,சொக்கநாதரையும் வணங்கி செல்லுங்கள். உங்கள் வேண்டுதல் நிறைவேறும் என்றார்.        அதனை தெய்வ வாக்காக நினைத்து இருவரும்  வைகை  ஆற்றில் நீராடசென்றனர். அப்போது அங்கே ஒரு குழந்தையின் அழுகுரல் கேட்டது. குரல் வந்த இடத்தில் தும்பை செடியின் அருகில் ஓர் அழகான ஆண் குழந்தையைக் கண்டு அந்த  குழந்தையை கையில் வாரியெடுத்து அணைத்துக் கொண்டார் பொன்னம்மாள். அக்குழந்தையைக் கடவுள் தந்த பரிசாக கருதி, குழந்தையுடன் அன்னை  மீனாட்சியையும், சொக்கநாதரையும் வழிபட்டு விட்டு ஊர் வந்து சேர்ந்தார்கள். தும்பைச் செடிகளின் அருகே கண்டு எடுத்ததால் அந்த குழந்தைக்கு  ‘தும்பையப்பர்’ என்று பெயர் சூட்டினார்கள். அதுவே பின்னர் ''பையப்பர்'' ஆகி ''ஐயப்பர்'' என மருவியது. ஏழு வயது தும்பையப்பரை அழைத்துக்கொண்டு மதுரை  மீனாட்சி கோயில் சித்திரை திருவிழாவுக்குச் சென்றனர். விழாக்கூட்டத்தில் குழந்தையைத் தவறவிட்டு விட்டனர். எங்கு தேடியும் காணவில்லை. இருவரும் அழுது புலம்பி தவித்தனர். பின்னர் ஏமாற்றத்தோடு ஊர் திரும்பினார்கள். மதுரையில் தன் தாய்,தந்தையரைத் தேடித்தேடி ஓய்ந்து போன தும்பையப்பர், அங்கு மளிகைக் கடை ஒன்றில் பணியாளராக சேர்ந்தார். வடுகநாதரும், பொன்னம்மாளும், மீனாட்சி, சொக்கநாதர் பெருமைகளைப் பற்றி நிறைய கூறியிருந்ததால், தினமும் கடை திறக்குமுன்,  கோயிலுக்கு சென்று மீனாட்சி அம்மனை வணங்கி செல்வார். ஒருநாள் அம்பாள் சந்நதியில் செந்நிற பட்டுகட்டி, செந்தூர திலகமிட்டிருந்த ஒரு பெண்மணி நின்றிருந்தாள். அவள், தும்பையப்பரிடம், குழந்தையே ! கோயிலுக்கு தினமும் வந்து செல்கிறாயே உனக்கு என்ன வேண்டுதல் இந்த சின்ன வயதில், என்று  கேட்க, தும்பையப்பர், அம்மா, என் பெற்றோரிடம் நான் சேரவேண்டும், என்று கூறி அழுதார். அழாதே, மீனாட்சி அம்மனைத் தொடர்ந்து வணங்கி  வா, என்றாள் அந்த அம்மையார். இப்படி பல நாட்கள் தும்பையப்பரிடம் பேசி வந்தாள் அந்த அம்மா, அடுத்த ஆண்டு கோயிலுக்கு வந்த பெற்றோரை,  தும்பையப்பர் நேரில் கண்டார். அவர்களும் அவரைக் கண்டு பேரானந்தம் கொண்டனர். குழந்தையைக் கட்டித்தழுவி கண்ணீர் பெருக்கினர். பெற்றோருடன் ஊருக்குச் செல்லும் முன், தும்பையப்பர் அம்பாள் சன்னதி முன்னே வந்து, அதுவரை தனக்கு ஆறுதலளித்த அம்மையாரிடம், அம்மா, எங்க அம்மா அப்பாவை கண்டுகொண்டேன் என்றார், அப்படியா  மிகவும் சந்தோஷம்! என்று பதில் கூறிய, அந்த அம்மையார் தான்தான் ''மீனாட்சியம்மை'' என்று அவருக்குக் குறிப்பால் உணர்த்தினாள் . பின்னர் ஒரு கண்ணாடியையும்,  எலுமிச்சைக்கனி ஒன்றையும் அவரிடம் கொடுத்து, தும்பையப்பா, கண்ணாடியை பூஜை அறையில் வை. அதற்குமேல் இந்த எலுமிச்சைக்கனியை வை. கனி அழுகி  என்றைக்கு கண்ணாடியில் முகம் தெரியாமல் போகிறதோ அன்று என்னிடம் வா, என்று சொல்லி விடை கொடுத்தனுப்பினார், பெற்றோருடன் ஊர் வந்த தும்பையப்பர்,  பூஜையில் ஈடுபட்டார். ஒருநாள் எலுமிச்சைக் கனி அழுகி இருப்பதைக் கண்டார். கண்ணாடியில் முகமும் தெரியவில்லை. உடனே, மீனாட்சி அன்னையைக் காண  மதுரையை நோக்கி சென்றார். அப்போது கோயிலில் யாகம் நடந்து கொண்டிருந்தது. 
அந்த அம்மையாரைத் தேடி, அம்மா, அம்மா... என்று அழைத்து தேடினார், எங்கு தேடியும் அந்த அம்மையாரை காணாத சோகத்தில் தும்பையப்பர் பளிச்சென்று  அந்த யாகத்தீயினுள் பாய்ந்து விட்டார். உடனே மீனாட்சி அம்மை அங்கே தோன்றி, யாக குண்டத்துள்ளிருந்து தீக்காயங்கள் எதுவும் இல்லாமல் தும்பையப்பரை வெளிவர செய்தார். அவருடைய பக்தியை கண்டு மகிழ்ந்து, அவர் செவியில் எட்டெழுத்து மந்திரத்தை உபதேசம் செய்தாள் அன்னை அந்த மந்திரமே ''ஹரி ஓம் ராமானுஜாய" பின்னர் உலகில் மாய சக்திகளும், மாந்திரீக சக்திகளும் மேலோங்கி வருகிறது, மாந்திரீகத்தால் தெய்வசக்தியை அடக்க ஒரு கூட்டம்  புறப்பட்டிருக்கிறது. அவர்களிடமிருந்து மக்களை காப்பாற்றுவாயாக. அதற்காகத்தான் நீ இந்த மண்ணில் தோன்றியிருக்கிறாய். என்னை பூஜை செய், நான் துணை  இருப்பேன். தென்திசை நோக்கிச் செல். எங்கே ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துகிறதோ அவ்விடமே நீ தங்கி இருக்க ஏற்ற  இடமாகும்,’’ என்று கூறி வாழ்த்தி அனுப்பினாள். அன்னை மீனாட்சியின் வாக்கை ஏற்று தெற்குதிசை நோக்கி தும்பையப்பர் புறப்பட்டு சென்றார். உவரிக்கு வந்து, அங்கு குடிகொண்டுள்ள சுயம்புலிங்க சுவாமியை தரிசனம் செய்து விட்டு செட்டியாபத்து கிராமத்துக்கு வந்தார். அங்கிருந்த ஒரு நீர்நிலையில் புலியும், மானும் ஒன்றாக நீர் அருந்துவதைக் கண்டார்.  மீனாட்சி அன்னையின் ஆணைப்படி தான் தங்கியிருக்க வேண்டிய இடம் இதுவே என புரிந்துகொண்டு அங்கே யோகநிலையில் அமர்ந்து தவம் செய்தார். அம்மனுக்கு கோயில் எழுப்பி, பூஜை செய்து  வந்தார். பின்பு சிலகாலம் கழித்து உடலை விடுத்து இறைவனார், பின்பு ஒருநாள் அங்கு வசித்து வந்த வைணவர் ஒருவரின் கனவில் தோன்றி, நான் பூஜை செய்து வந்த அம்மனுக்கு தினமும் நீ பூஜை செய்து வா, அதோடு என்னையும் கவனி, உன் உள்ளத்துக்கும் உடமைகளுக்கும் , குலத்துக்கும் காவலாய் இருப்பேன்’ என்றார். அந்த வைணவர் அம்மனுக்கும், தும்பையப்பருக்கும் கோயில் எழுப்பினார்.  முதன்முதலில் உருவாக்கும் சாமி என்பதாலும்,( இதற்கு முன்பே அதன் அருகில் ஆத்தி கோவில் இருந்ததாகவும் சொல்கிறார்கள்) கனவில் பெரிய உருவமாக தோன்றியதாலும் அவருக்கு ''பெரியசாமி'' என்று பெயரிட்டார். அம்மனை ''பெரிய பிராட்டி'' என்றழைத்தார். அடுத்தடுத்து கோயிலில் ''வயணப் பெருமாள்'' ''அனந்தம்மாள்'' காவல்தெய்வமான ''ஆத்திசாமி''  என ஐந்து வீடுகளில் சன்னதிகள் உருவாயின. அதனால் இக்கோயில் ''ஐந்து வீட்டு சாமிகள்''  என்று அழைக்கப்பட்டது. பிறகு, திருப்புளியாழ்வார், ஆஞ்சநேயருக்கும் சன்னதிகள் அமைக்கப்பட்டன. இப்படி பல சன்னதிகள் தோன்றினாலும் ''ஐந்து வீட்டு சாமி'' என்றுதான் இப்போதும் இக்கோயில் அழைக்கப்படுகிறது. இங்கு ''பெரியசாமி'' சங்கு, சக்கரம் ஏந்தி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். பில்லி, சூனியம், செய்வினை, ஏவல் போன்றவற்றைப் போக்கும் தலமாகவும், மாந்திரீக பிரச்னைகளுக்கும், மனநோயால் பாதிக்கப்பட்டோருக்கும் பரிகார தலமாகவும்  இக்கோயில் விளங்குகிறது. சுகபிரசவம் வேண்டுவோர் ''பெரியபிராட்டி'' அம்மனுக்கு வளையல்களை காணிக்கையாக செலுத்துகின்றனர்.