ஸ்தல விருட்சகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஸ்தல விருட்சகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஆத்தி மரத்தின் அதிர்ஷ்டமும், ஆரோக்கியமும்

         


 ஆத்தி மரம் பழந்தமிழர்களின் கலாச்சாரத்தில்  சிறப்புமிக்கது மட்டுமல்ல, தமிழர்களின் உடல் நலத்துக்கும் பெருந்துணையாக விளங்கிய மருத்துவ குணங்கள் நிறைந்த மரமாகும். 


      பச்சை வண்ணத்தில் குறு மரங்களாக வளரும் ஆத்தி மரத்தின் இலைகள் இரண்டாகப் பிளந்தும், காய்கள் நீண்டு குறுகியும் இருக்கும். கிளைகள் கீழ்நோக்கி வளைந்து காணப்படும். சித்திரை மாதத்தில் மஞ்சள் நிறத்தில் பூக்கள் பூக்கும், ஆத்தி மரங்களில், ஆடி மாதம் முதல் காய்கள் காய்க்கும்.

 வடஇந்தியாவில் விஜயதசமி பண்டிகை நாட்களில், சகல நன்மைகள் அடையவும், எதிரிகள் ஒழியவும், மக்கள் ஆத்தி இலைகளை பூஜித்து வணங்குவர். 

 தமிழ் மன்னர்களின் காலத்தில் "ஆத்தி மாலை"களை பயண்படுத்தி வந்துள்ளனர். இருந்தாலும், மொழியிலும், கலாச்சாரத்திலும் வேறுபட்ட வட இந்தியர்கள், இன்றும் ஆத்தியைப் போற்றி, சந்தோசத்தையும், வெற்றியையும் அடைகிறார்கள் என்பது மிகவும் மகிழ்வான செய்தி,ஆத்தி மரத்துக்கு வட நாட்டில் "ஆப்தா" மரம் என்று பெயர்.

                ஆத்தி மரத்தின் பயண்கள்

 ஆரோக்கியம்: 

செரிமான கோளாறுகள், சரும வியாதிகள், காய்ச்சல், வீக்கம் மற்றும் வயிற்றுப் புண்களுக்கு, ஆத்தி இலைகள், மரப்பட்டைகள், வேர்கள், மற்றும் பூக்களின் மொட்டுக்கள் மருந்தாகின்றன. சிறுநீரக பாதிப்புகள், வாதம் தொடர்பான வியாதிகள், தொண்டைப்புண் மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான வியாதிகளைப் போக்கும் அரிய தன்மைமிக்க வேதிச்சத்துக்களைக் கொண்ட மரமாக, ஆத்தி மரங்கள் திகழ்கின்றன.

ஆஸ்துமா: 

ஆத்தி மர இலைகளிலுள்ள ஆன்டி ஹிஸ்டாமின் தன்மை காரணமாக, ஆஸ்துமா எனும் சுவாச ஒவ்வாமை பாதிப்பை குணமாக்குகிறது. ஆத்தி மர இலைகளை நீரில் இட்டு கொதிக்கவைத்து வடிகட்டி பருகி வர, பாதிப்புகள் விரைவில் குணமாகும்.

தலைவலி: 

அடிக்கடி ஏற்படும் தலைவலி தொல்லையால் அவதிப்படுபவர்கள், ஆத்தி இலைகளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை பருகிவர, தலைவலி குணமாகும்.

உடல்சூடு:

 நீண்டநாட்கள் மருந்து மாத்திரைகள் சாப்பிடுவது, உடலில் அதிகமாக ஏற்படும் சூடு, தகாத உறவுகளால் ஏற்படும் வேட்டைச்சூடு போன்ற உடல்நலக் கோளாறுகளுக்கு, சிறந்த தீர்வளிக்கிறது, ஆத்தி மரத்தின் வேர்கள் மற்றும் பட்டைகள்.

கல்லீரல்:

உடலின் உள் இயக்கத்துக்கு உறுதுணையாக விளங்கும் முக்கிய சுரப்பியான கல்லீரல், குடிப்பழக்கம், மேலை நாட்டு உணவுகள் போன்ற காரணங்களால் பாதிக்கப்பட்டு, ஹெபடைடிஸ் எனும் கல்லீரல் அழற்சி பாதிப்பு ஏற்படுகிறது. இதனால் சிலருக்கு கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, உடல்நலம் பெரிதும் பாதிக்கப்படும் சூழ்நிலை உருவாகும். ஆபத்தான கல்லீரல் வீக்கத்தை குணமாக்கும் வல்லமை, ஆத்தி மரத்துக்கு உண்டு. ஆத்தி மரவேர் மற்றும் பட்டைகளை உலர்த்தி இடித்து, அந்தத் தூளை நீரில் இட்டு காய்ச்சி வடிகட்டி பருகி வந்தால், கல்லீரல் வீக்கம் மற்றும் வேதனை குணமாகிவிடும். இந்தக் குடிநீரை அவ்வப்போது பருகி வர, வயிற்றுப்பூச்சிகளை அழித்து, பசியைத் தூண்டும். 

ஆத்திப்பட்டை குளியல்:


   தேமல், படை போன்ற சரும பாதிப்புகள் உடலில் அரிப்பை ஏற்படுத்தி, சொரிவதன் மூலம், அந்த இடத்தை இரணமாக்கிவிடும். ஆத்தி மரப்பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, உடல் பொறுக்கும் இளஞ்சூட்டில் அந்த நீரில் வாரமிருமுறை குளித்துவர, தேமல், படை போன்ற சரும வியாதிகள் யாவும் குணமாகிவிடும்.


வாய்ப்புண் மற்றும் தொண்டைப்புண்:


சிலருக்கு வீரியமிக்க மாத்திரைகள் மற்றும் சுவாச பாதை கிருமிகளின் தொற்றால் மற்றும் உடல் சூட்டால், வாயில் மற்றும் தொண்டையில் புண் ஏற்படும். ஆத்திப் பழங்களை நீரில் இட்டு கொதிக்க வைத்து, அந்த நீரில் தினமும் அடிக்கடி வாய் கொப்புளித்து வர, வாய் மற்றும் தொண்டையில் ஏற்பட்ட புண்கள் ஆறிவிடும். இதுவே, உடல் சூடு தொடர்பான அனைத்து வியாதிகளுக்கும் மருந்தாகிறது. சிறுநீரக கோளாறுகள், வீக்கம் மற்றும் புற்றுநோய் போன்ற பாதிப்புகளுக்கு தீர்வாகிறது,

காயங்கள்:

 மற்றும் புண்கள் ஆற ஆத்தி மரப்பட்டைகளை நீரிலிட்டு காய்ச்சி, அந்த நீரை, காயங்கள் மற்றும் புண்களின் மேல் ஊற்றி அலசிவர, ஆறாத காயங்கள் விரைவில் ஆறிவிடும். ஆத்தி மரக்காய்கள் சிறுநீர் பாதிப்பை குணப்படுத்துவதிலும், பூக்கள் வயிற்றுப் போக்கை சரியாக்கி, வயிற்றுப்புழுக்களை அழிப்பதற்க்கும் பயன்படுகிறது. ஆத்தி மரத்தின் வேர், பட்டை, இலைகள், பூக்கள், காய்கள் மற்றும் பழங்கள் அனைத்தும் கொண்ட தூள், சிறந்த நோயெதிர்ப்பு சக்திமிக்க மூலிகை மருந்தாகிறது. உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி இரத்தம் மற்றும் உடல்நலத்தைக் காப்பதில், சிறப்பாக செயல்படுகிறது. மூல வியாதி மற்றும் தொழுநோய் வீக்கங்களையும் குணப்படுத்தும் ஆற்றல்மிக்கதாகத் திகழ்கிறது. ஆத்திமரம், தமிழர்கள் வீடுகளில் அவசியம் வளர்க்கவேண்டிய பழமையான ஒரு மூலிகை மரம்! மூலிகை மரம் மட்டுமல்ல, அதிர்ஷ்ட மரமும் கூட... 
                   ஆத்தி சூடி

தாழம்பூ, பிரம்மாவுக்காக பொய் சொன்னதால் ஏற்பட்ட பாவத்தை போக்க, திருசெட்டாங்குடி எனும் ஊரில் ஆத்தி மரமாக முளைத்து இறைவனுக்கும் பக்தர்களுக்கும் நிழல் தந்து தனது பாவத்தை போக்கி கொண்டதாக ஆன்மீக வரலாறு உள்ளது, 
 அவ்வையார் ஆத்திசூடி அமர்ந்த தேவனே என்று சிவனை புகழ்ந்து பாடி வணங்கியுள்ளார். எனவே சிவனுக்கும் ஆத்தி மரத்துக்கும் நெறுங்கிய தொடர்பு உள்ளது.