ஆத்தியப்பரின் அதிசயம்

ஒரு அதிசயம்!ஆத்தியப்பர் வைத்தியராக மாறிய தருணம்: 

(அன்று 26/05/25) இரவு 10 மணி. வெளியே கொட்டும் மழை. ரயில் கிளம்ப இன்னும் சிறிது நேரமே இருந்தது. பதற்றத்துடன் ஒரு ஆட்டோவை நிறுத்தி, "ரயில் நிலையத்திற்கு சீக்கிரம் போக வேண்டும்! அவசரம்!" என்று கூறினேன்.
 ஆட்டோகாரர் ஒரு நொடி கூட தாமதிக்காமல், வேகமாக வாகனத்தைச் செலுத்தத் தொடங்கினார். சற்று இருண்ட சாலைகளில் ஆட்டோ பாய்ந்து சென்றது. திடீரென, மழைநீர் நிரம்பிய ஒரு பள்ளம்! அதை கவனிக்காத ஓட்டுனர், வேகத்தைக் குறைக்காமல் அதனுள் ஆட்டோவை செலுத்த, "சட்டென்று" ஆட்டோ உயரத் தூக்கி போட்டது. அடுத்த நொடி, நான் இருக்கையிலிருந்து ஓரடிக்கும் மேல் தூக்கி எறியப்பட்டு, "நச்" என்று அதே இடத்தில் வந்து விழுந்தேன். அவ்வளவுதான்! என் இடுப்பில் ஒரு சுருக்கென்ற வலி! என்னை அறியாமலேயே, "அம்மா!" என்ற அலறல் என் வாயிலிருந்து வெளிவந்தது. 

அந்த வலியுடனே என் ரயில் பயணத்தைத் தொடர்ந்தேன். இரவு முழுவதும் வலியாக இருந்தது. சிறுநீர் கழிக்க ரயில் படுக்கையிலிருந்து எழுந்திருக்கக் கூட முடியவில்லை. ஒவ்வொரு அசைவும் வலியைக் கூட்டியது. எப்படியோ பயணத்தை முடித்து ஊர் திரும்பினேன்.

 இரண்டு நாட்கள் கழித்து, மருத்துவரைச் சந்தித்தேன். அவர் "ஓம்னி ஜெல்" என்ற மருந்தை பரிந்துரைத்தார். அதைப் பயன்படுத்தியும் வலி தீரவில்லை. 

சில நாட்கள் கழித்து, எலும்பு முறிவு சரிசெய்யும் வைத்தியரிடம் சென்றேன். அவர், எனக்கு நரம்பு பிடித்துக்கொண்டதாகக் கூறி சிகிச்சை அளித்தார். ஆனாலும் வலி குறைந்தபாடில்லை.

 மேல்நாட்டு கழிவறையைப் பயன்படுத்தும் போது கூட வலியால் துடித்துப் போனேன்.

பின்பு 16/06/25 அன்று இரவு. நமது குலதெய்வக் கோவிலுக்குச் செல்ல வேண்டி ஒரு பேருந்துப் பயணம். பேருந்தின் படிக்கட்டுகளில் ஏறி இறங்குவது கூட சிரமமாக இருந்தது. என் முதுகில் சுமந்து செல்லும் பையைத் தூக்க கூட முடியவில்லை. போகும் வழியெல்லாம் வேகத்தடைகள் வரும்போது என் இடுப்பில் ஒரு மின்சாரம் பாய்ந்தது போல் வலித்தது. ஒவ்வொரு வேகத்தடையும் என் பொறுமையைச் சோதித்தது. ஆனாலும், வலியைப் பொறுத்துக் கொண்டு பயணத்தைத் தொடர்ந்தேன்.

17/06/25 அன்று காலை, மதியம் இருவேளை பூஜைகளிலும் கலந்துகொண்டேன். பிறகு திருச்செந்தூர் சென்றேன். உடன்குடியிலிருந்து திருச்செந்தூர் செல்லும் வழியெல்லாம் வேகத்தடைகள் என்னை வாட்டி எடுத்தன. திருச்செந்தூரில் இரவு தங்கிவிட்டு,

 மறுநாள் 18/06/25 காலையில் திரும்பவும் நமது கோவிலுக்கு வந்தேன். வரும் வழியிலும் வேகத்தடைகள் என்னை வேதனைப் படுத்தியது. எப்படியோ கோவிலை அடைந்தேன்.

 காலை நடைதிறந்தவுடன் அனைத்து சன்னதிகளிலும் நமது தெய்வங்களை வணங்கினேன். ஆத்திசாமி சன்னதிக்கு வந்தபோது, ஒரு உள்ளுணர்வு என்னை உந்தியது. அங்கே காணிக்கையாகச் செலுத்தப்பட்டிருந்த காலணிகளை எடுத்து, என் வலி இருந்த இடத்தில் வைத்து, "ஆத்திசாமியே, என் வலி தீர வேண்டும்!" என்று கண்ணீருடன் வேண்டிக்கொண்டேன். பிறகு பூஜையிலும் கலந்துகொண்டேன்.

ஆத்திசாமி சன்னதியில் அண்ணாவியிடம், என் முகத்தில் தீர்த்தம் அடியுங்கள்" என்று கேட்டேன். அண்ணாவியும் ஆத்திசாமி பூஜை முடிந்ததும் தீர்த்தத்தை எடுத்து என் முகத்தில் மூன்று முறை எறிந்தார். அப்போதே என் உடலில் ஒரு சிலிர்ப்பு! விவரிக்க முடியாத ஒரு தெய்வீக உணர்வு! பிறகு அனைத்து சன்னதிகளிலும் பூஜைகள் முடிந்த பிறகு, சர்க்கரைப் பொங்கல் வாங்கிச் சாப்பிட்டுவிட்டு, நான் தங்கியிருந்த அறையில் வந்து உறங்கினேன்.
மதிய பூஜைக்கு எழுந்தபோது, ஒரு அதிசயம்! என் வலி சற்று குறைந்திருப்பதை உணர்ந்தேன். இது வெறும் தற்செயல் நிகழ்வா, அல்லது ஆத்திசாமியின் அருளா? மதிய பூஜையில் கலந்துகொண்டு, மாலை சுமார் நான்கு மணி அளவில் ஊர் திரும்பத் தயாரானேன். என் முதுகில் சுமக்கும் பையைத் தூக்கி மாட்டினேன்... ஆச்சரியம்! எனக்கு எந்தவிதமான வலியும் தெரியவில்லை! இது எப்படி சாத்தியம்? அங்கிருந்து சுமார் 6 மணி நேரம் பேருந்துப் பயணத்தில் ஊர் வந்து சேர்ந்தேன். பேருந்தில் வரும்போது வேகத்தடைகள் வந்தன. ஆனால், எனக்கு எந்தவிதமான வலியையும் வேதனையையும் தரவில்லை! ஆனால், 
குனிந்து நிமிரும் போது மட்டும் வலி இருந்த இடத்தில் லேசான வலி போல் கூச்சம் இருந்தது.

நான் இன்று (21/06/25) இந்தப் பதிவை எழுதும் நேரம், எனக்கு எந்தவிதமான வலியும் இல்லை! வலியில்லாமல் குனிந்து நிமிர முடிகிறது. கழிவறையைப் பயன்படுத்த முடிகிறது. என்ன ஒரு ஆச்சரியம்! ஆத்தியப்பசாமி எனது வேண்டுகோளை ஏற்று உடனே சரி செய்து இருக்கிறார்! இந்தப் பதிவை எழுதும் போதே என் உடம்பில் ஒரு புல்லரிப்பு! நமது குலதெய்வத்தின் மகத்துவம் என்னை மிகவும் புளகாங்கிதம் அடையச் செய்துள்ளது. ஆத்தியப்பர், என் வலியைக் குணமாக்கி, என்னிடம் அதிசயம் செய்திருக்கிறார்!
"ஹரி ஓம் ராமானுஜய"
"அடியேன் தாசன்" ஆத்தியப்பன் S

கருத்துகள் இல்லை: